புதுடெல்லி: தலித் கிறிஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கிய முடிவை மத்திய அரசு தற்காத்துப் பேசியுள்ளது.
வரலாற்றுப் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால் தலித் கிறிஸ்துவர்களோ தலித் முஸ்லிம்களோ பின்னடைவைச் சந்தித்ததாக எந்தப் பதிவும் இல்லை. எனவே இவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளைப் பெற இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய சமூக நீதி அமைச்சு தெரிவித்தது.
1950ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் தாழ்த்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் , சமுதாய ரீதியில் பேதங்களை எதிர்கொண்டவர்கள் என்பதை அது குறிப்பிட்டது.
இந்து சமயத்தின் சில பிரிவினர்மீது காட்டப்பட்ட தீண்டாமைப் பழக்கத்தால் பொருளியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் அவர்கள் பின்தங்க நேரிட்டது.
ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களில் இத்தகைய தீண்டாமைக் கொடுமை இல்லை என்பதால் அந்த சமயங்களுக்கு மாறியவர்கள் எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
ஒருவகையில் பார்த்தால், இத்தகைய பின்னடைவில் இருந்து மீளும் வழியாகவே அந்தக் காலத்தில் பலரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களுக்கு மாறினர். எனவே அவர்கள் சலுகைபெற இயலாது என்று அமைச்சு எடுத்துக்கூறியது.

