நாட்டில் 100 மருத்துவக் கல்லூரிகள்
புதுடெல்லி: இந்தியாவில் எதிர்வரும் 2027க்குள் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப் பட்டு வரும் நிலையில், மாவட்ட அளவிலான மருத்துவ மனை அல்லது மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்றுவதற்கு ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தச் செலவுக்கு மத்திய அரசு 60% நிதியும் மாநில அரசு 40% நிதியும் வழங்குகின்றன.
கொள்ளை போன 100 கிலோ இரும்பு;
திருடர்களைத் தாக்கிய மக்கள்
பாட்னா: பீகாரின் முசாபர்பூர் நகரில் பல இரும்புக் கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக இரும்புத் துண்டுகள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்புத் துண்டுகள் திருடப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரைப் பிடித்த மக்கள், அவர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். மயக்கமடைந்த திருடர்களைக் காவலர்கள் மீட்டனர். விசாரணை நடந்து வருகிறது.

