புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அமெரிக்க போக்குவரத்து அமைச்சு 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து இருக்கிறது.
பயணிகளுக்குப் பணத்தை திருப்பித் தருவதில் கால தாமதம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு விமானப் பயணங்களுக்கான முன்பதிவை ரத்து செய்வதும் பயணத் தேதியை மாற்றுவதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மாற்றம் செய்த பயணிகளுக்கு, சில விதிமுறைகளைப் பின்பற்றி விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைத் திருப்பி அளிப்பது வழக்கம். விமான நிறுவனங்கள் இவ்வாறு மாற்றங்கள் செய்தாலும் குறிப்பிட்ட தொகை திருப்பி அளிக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், பயணத் தேதி, நேரத்தை மாற்றிக்கொண்ட, பயணத்தை மொத்தமாக ரத்து செய்த பயணிகளுக்கு உரிய தொகையைத் திருப்பித் தருவதில் ஏர் இந்தியா நிறுவனம் மெத்தனம் காட்டியதாகப் புகார் எழுந்தது.
தொகையைத் திருப்பித் தர அதிக காலம் எடுத்துக்கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை திருப்பித் தர அமெரிக்க போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டது. இதுபோக அபராதமும் விதித்துள்ளது.
ஏர் இந்தியா உட்பட ஆறு நிறுவனங்களுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்த ஆறு விமான நிறுவனங்களும் ஒப்புக்கொண்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏர் இந்தியா ரத்து செய்த அல்லது நேரத்தை மாற்றியமைத்த விமானச் சேவைகள் தொடர்பாக 1,900 புகார்கள் பதிவாகி உள்ளன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் நூறு நாள்களுக்கும் மேல் அவகாசம் எடுத்துக்கொண்டது. இதையடுத்தே அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை அண்மையில்தான் டாடா குழுமம் வாங்கியது. ஆனால் மேற்குறிப்பிட்ட அபராத விதிப்புக்குக் காரணமான புகார்கள் அதற்கும் முன்பாகவே பதிவானவை என இந்திய ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

