காஞ்சிபுரம்: இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் குழந்தையான நான், இன்று மருத்துவராகி சேவையாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் சக்தி கந்தசாமி.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் சக்திக்கு ஒன்றரை வயதில் கல்லீரல் மாற்று அறுவை சிசிச்சை நடைபெற்றது.
அரிய வகை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை சக்திக்கு, அச்சமயம் மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது. இந்த நோய் உள்ளவர்களுக்கு கல்லீரலுக்கும் குடலுக்கும் இடையேயான இணைப்பு இல்லாததால் பித்தக்கழிவுகள் கல்லீரல் பகுதியிலேயே தங்கிவிடும். நாளடைவில் உயிரிழக்க நேரிடும்.
கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த சக்தியின் உயிரைக் காப்பாற்ற சென்னையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது தந்தையே மகனுக்கு கல்லீரல் தானம் அளித்தார்.
சிகிச்சை வெற்றி பெற்றதை அடுத்து, உயிர் பிழைத்த குழந்தை சக்திக்கு மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து சஞ்சய் என்று புதுப்பெயர் சூட்டினர். இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் உயிர்பிழைத்த முதல் குழந்தையான சஞ்சய் சக்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று குழந்தைகள் நல மருத்துவராகி உள்ளார்.
"2021ல் மருத்துவப் படிப்பை முடித்தேன். குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் குழந்தைகள் நல மருத்துவரானேன்," என்கிறார் சஞ்சய் சக்தி.