புதுடெல்லி: பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோதே பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.
"உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை நாம் ஓய மாட்டோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும்.
"தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது. போர் இல்லாவிட்டால் அமைதி நிலவும் என்று உலக அளவில் செயல்படும் அமைப்புகள் நினைக்கக்கூடாது.
"மறைமுக போர்களும் ஆபத்தானவை என்பதை நாம் உணரவேண்டும். எந்த நாடாக இருந்தாலும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது," என்றார் பிரதமர் மோடி.
ஒரே ஒரு தாக்குதல் நடைபெற்றாலும் அதுவும் பயங்கரவாதம்தான் என்றும் ஒரே ஓர் உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்புதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதுதான் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதச் செயல்பாடு என்பது உள்நாட்டுப் பொருளியலையும் பாதிக்கும் என்றார்.
"இந்த உலகம் பயங்கரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை சந்தித்துவிட்டது.
"இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் பயங்கரவாதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"விலை மதிப்பற்ற ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஆனாலும், நாம் துணிச்சலுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம்," என்றார் பிரதமர் மோடி.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

