புதுடெல்லி: இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு வருபவர்கள் இனி காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழை தாக்கல் செய்யத் தேவை இல்லை என அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து சவூதிக்கு வேலைக்கு விண்ணப்பிப்போரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு பல்வேறு உலக நாடுகள் விசா அளிப்பது தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கு செல்வதற்காக விசா கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்கள், காவல் துறையின் தடையில்லா சான்றிதழை அளிக்க வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே வலுவான நல்லுறவு இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அத்தூதரகம் அமைதியான முறையில் வாழும் இந்திய குடிமக்களின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு நிமித்தம் செல்லும் இந்திய குடிமக்கள் காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழுக்காகவும் அதை தூதரகத்தில் தாக்கல் செய்த பிறகும் கணிசமான நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இனி அந்தக் காத்திருப்புக்கு அவசியம் இல்லை என்றும் விண்ணப்பங்கள் அனைத்தும் வேகமாகப் பரிசீலிக்கப்பட்டு விசா விரைந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்களும் இதுபோன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சவூதி அரசாங்கம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.