புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே ஒரு பெட்டிக்குள் வைத்து மூடப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உடல் யாருடையது, இந்தக் கொலையைச் செய்தது யார் என 14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், தந்தையே மகளைக் கொன்று பெட்டிக்குள் அடைத்து சாலையோரம் வீசிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அந்தப் பெண்ணின் தாயும் உதவியுள்ளார்.
பெற்றோர் கைதாகினர்.
"தங்கள் மகள் ஆயுஷி, வேறு பிரிவைச் சேர்ந்த ஆடவரைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவரை ஆணவக் கொலை செய்துள்ளனர்," என காவலர்கள் தெரிவித்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கிறார் நித்தேஷ் யாதவ். இவரது மகள் ஆயுஷி சவுத்ரி. பெற்றோர், சகோதரனோடு வசித்து வந்த ஆயுஷி, 22, டெல்லி கல்லூரி யில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
ஆயுஷி தன் குடும்பத்தினரிடம் கூறாமல் வேறு பிரிவைச் சேர்ந்த சத்ரபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு, வீட்டிற்குத் தெரியாமல் வெளியே வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.
ஆயுஷி பிடிவாதத்தைக் கண்டு வெறுப்படைந்த நித்தேஷ், மகளின் திருமணம் பிடிக்காமல் சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

