பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு ெவடிப்பு சம்பவத்துக்கு 'அடக்குமுறைக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பு' என்ற புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பு அரபு மொழியில் சமூக ஊடகங்களில் ஓர் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
மங்களூரில் அண்மையில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பயங்கரவாத செயல் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கத்ரி மஞ்சுநாதர் கோவில் உட்பட மூன்றுகோவில்களில் தாக்குதல் நடத்த ஷாரிக் திட்டமிட்டிருந்தது இப்போது உறுதியாகி உள்ளது.
ஆண்டு இறுதியில் கடலோர மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களில் லட்சதீப உற்சவம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் என்பதால் அச்சமயம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே, மங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருந்த கூட்டத்தில் வெடிகுண்டு வைக்க ஷாரிப் தரப்பினர் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.
எனினும் முதல்வர் பசவராஜ் கடைசி நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே துபாயைச் சேர்ந்த சில அமைப்புகளுடன் ஷாரிக் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் அவற்றுள் சில பயங்கரவாத அமைப்புகள் என்றும் கூறப்படுகிறது.
ஷாரிக்கிற்கு உதவியாக இருந்த அப்துல் மதீன், பத் அலி ஆகியோரை தேடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இருவருக்கும் பங்ளாதேஷில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்புடன் நேரடித் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் இருவரை யும் அடையாளம் காட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

