பெங்களூரு: பொது சிவில் சட்டம் குறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் குழுக்கள் அமைத்துள்ளன.
"பொது சிவில் சட்டம் அனைவரும் விரும்பக்கூடியதாகவே இருக்கும். எனவே அதனை அமல்படுத்தத் தேவையான அனைத்து வகை ஆலோசனைகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"மத்திய அரசு இது தொடர்பாக உரிய ஆலோசனைகளை மேற் கொண்டு இருப்பதை ஏற்கெனவே தெரிவித்துள்ளது," என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.
இதற்கிடையே இந்தச் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என அவை கூறியுள்ளன.