மும்பை தாக்குதல் நினைவுநாளில் ஜெய்சங்கர்:
புதுடெல்லி: பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (படம்) தெரிவித்துள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளையொட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதில் உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களும் அத்தாக்குதலை மேற்பார்வை செய்தவர்களும் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
"உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கைமாறாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
இதற்கிடையே, சீனா உடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா உறுதியாக இருக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக இருப்பதே சீனாவை கையாளுவதற்கான சரி யான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றார்.
"நம் நாட்டு நலனில் அவர்கள் அக்கறை காட்டாத போது, நம் படைகளை முன்னோக்கி நகர்த்துவதில் உறுதியாக இருப்போம். எப்போதும் இதேபோல நடந்துகொள்ள முடியாது.
"எங்கெங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை உள்ளது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
கடந்த 2020 முதல் எல்லையில் பெரும் படைகளை குவித்து, அதை பராமரிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், சீன விவகாரத்தில் இந்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்றார்.

