புதுடெல்லி: நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி என்பது ஒரு தடையாக உள்ளது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த நாளில் டாக்டர் அம்பேத்கார் கூறிய பல்வேறு விஷயங்களை நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்றும் சுதந்திரம் மக்கள் மீது மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமத்தி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"இந்தப் பொறுப்பை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்றதனால், ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு பிரிட்டிஷ் மக்களைக் குற்றம் சொல்லும் வாய்ப்பை நாம் இப்போது இழந்து விட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் வகையில் அம்பேத்கார் கூறியுள்ளார்," என்றார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ.
இந்தியா போன்ற பரந்த நாட்டில், மொத்த மக்கள் தொகையில் 65% பேர், இன்னும் கிராமப்புறங்களிலேயே வசிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ஏற்ப வட்டார, உள்ளூர் மொழியே அவர்கள் இடையே பயன்பாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
"நாட்டில் சட்டத் தகவல்கள், சட்டபூர்வ தனி வகைச் சொற்கள், தொடர்கள் ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளக் கூடிய உள்ளூர் மொழியில் கிடைப்பதில்லை.
"இதனால், அனைவருக்கும் பொதுவான நீதி கிடைப்பது உறுதி செய்யப்படுவதற்கான தடைகளில் ஒன்றாக மொழி உள்ளது," என்றார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

