பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள முகமது ஷாரிக் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஷாரிக் ஏகே 47 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் ஷாரிக் தொடர்பில் இருந்து வந்துள்ளான். கடந்த எட்டு மாதங்களில் மட்டும், அந்த அமைப்புகளுடன் ஷாரிக் 189 முறை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், இணையத்தளம் மூலம் ஏகே 47 வகை துப்பாக்கிகளைத் தயாரிக்க முயற்சி செய்துள்ள ஷாரிக், அதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் இணையம் வழி வாங்கி இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிக் ஆய்வு மன்றம் (ஏஆர்எப்) என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ள ஷாரிக், வாடகைக் கார் சேவையைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தது தெரியவந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமது சதி வேலைகளுக்குத் தேவையான பொருள்களை எந்தவித சந்தேகத்துக்கும் இடம்கொடுக்காத வகையில் சிறிது சிறிதாக வாங்கிச் சேகரித்துள்ள ஷாரிக், மைசூருவில் தங்கி இருந்த போது, பெட்டிக் கடை ஒன்றில் ஒரே சமயத்தில் 100 தீப்பெட்டிகள் வாங்கியபோது கடைக்காரர்கள் சந்தேகமடைந்துள்ளனர். எதற்காக இவ்வளவு தீப்பெட்டிகள் என்று கேட்டபோது, பிள்ளைகள் பள்ளியில் 'புராஜக்ட்' மேற்கொள்வதற்கு தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தமிழகத்திலும் கேரளாவிலும் கர்நாடக காவல்துறையினர் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாரிக் பெரும்பாலும் கோவை, கேரளாவைச் சேர்ந்த சிலரது கைபேசி எண்களுக்குத்தான் அடிக்கடி பேசியுள்ளார் என்றும் எந்தெந்த பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் நெருக்கமாக இருந்தார் என்பது விரைவில் தெரிய வரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

