புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரத்தில் அனல் பறந்தது. இந்நிலையில், பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளும் இலவசங்களும் நிறைந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கல்லூரி மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் அளிக்கப்படும் என்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படும் என்றும் பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் மேற்கொண்ட பிரசாரம் வெற்றிக்கு கைகொடுக்கும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள போதிலும், இம்முறை ஆம் ஆத்மி வெற்றி பெறும் என டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இறுதிக்கட்டப் பிரசாரம் கிராமப்புறங்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
தனது சொந்த மாநிலம் என்பதால் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பல கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு வேட்டையாடினர்.
அண்மையில் ஒரே நாளில் நான்கு பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார் பிரதமர் மோடி.
இம்முறை ஆம் ஆத்மியின் செல்வாக்கு கூடியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆம் ஆத்மி கட்சியினர் பிரசாரத்தின்போது நகர்ப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மூன்று கட்சிகளும் உறுதியளித்துள்ளன.

