புதுடெல்லி: கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிக அளவில் செலவு செய்துவரும் நிலையில், அதைக் குறைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.
நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் சேமிக்கப்படும் அந்நியச் செலாவணி மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
"எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் சேமிக்கப்படும் அந்நியச் செலாவணி மதிப்பு குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு நவம்பர் வரை ரூ. 20 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
ஹரியானாவின் பானிபட்டில் 2ஜி எத்தனால் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஒடிசா, அசாம் ஆகியவற்றிலும் எத்தனால் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மாற்று எரிபொருள்கள் பயன்பாட்டுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கப் படுவதுடன், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

