2021-22ல் வரலாறு காணாத அளவுக்கு ரூ.14,000 கோடிக்கு ஏற்றுமதி
புதுடெல்லி: இந்தியாவின் தற்காப்பு ஏற்றுமதிகள் இதுவரை இல்லாத அளவுக்கு 2021-22ல் ரூ.14,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை இதை தெரிவித்தார்.
தோழமை வெளிநாடுகளுக்கு ராணுவ கனரக சாதனங்களை அதிகம் ஏற்றுமதி செய்ய ஏதுவாக அரசாங்கக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதன் பலன்கள் இப்போது கைகூடி வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்காப்புத் துறை ஏற்றுமதி 2014ல் ரூ.900 கோடியாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டில் அந்த ஏற்றுமதிகள் ரூ.19,000 கோடியை எட்டும். 2025வது ஆண்டு வாக்கில் ரூ.25,000 கோடி மதிப்புள்ள தற்காப்பு தயாரிப்புப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது இப்போதைய இலக்கு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
'இந்தியாவில் தயாரிப்போம்', 'உலகிற்காக தயாரிப்போம்' என்ற தாரகமந்திரத்தை ஒட்டி வெளிநாட்டு நிறுவனங்களை புதுடெல்லி அழைத்து வருகிறது.
அதேவேளையில், நாட்டின் வளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொள்ளும்படி தனியார் துறையை அரசு ஊக்குவித்து வருவதாக டெல்லியில் அமைச்சர் கூறினார்.
ஏற்றுமதியில் சாதனை படைத்து இருக்கும் அதேவேளையில், இந்தியா தற்காப்பைப் பொறுத்தவரையில் சுயசார்புடன் திகழ வேண்டும் என்பதிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றாரவர்.

