மும்பை: பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ரூ.75,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
அத்திட்டங்களில் ஒன்றான நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் 6வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே அவர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
பிறகு அவர் அந்த ரயிலில் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து பலரோடும் கலந்துரையாடினார். நாக்பூர் ரயில் திட்டத்தைக் காட்டும் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
அந்த ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 40 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது. அதில் 36 ரயில் நிலையங்கள் இருக்கும்.
அத்திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நாக்பூர் ரயில் திட்டத் தின் முதல் கட்டம் ரூ. 8,650 கோடி செலவில் அமைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.6,700 கோடி செலவில் 43.8 கி.மீ. தொலைவுக்கு நிறைவேற்றப்படும். இதில் 32 நிலையங்கள் அமைந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மிகான் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையை திறந்துவைத்தார்.
இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.
திரு மோடி, மும்பை-நாக்பூர் இடையேயான சம்ருத்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தையும் நேற்று தொடங்கி வைத்தார்.

