ஐதராபாத்: தெலுங்கானாவில் பாத யாத்திரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் காலவரையின்றி உண்ணாவிரதம் மேற்கொண்ட 'ஒய்எஸ்ஆர்' தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வந்த அவரது உடல்நிலை மோசமானதால் ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இளைய சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்தாண்டு ஜூலையில் தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிறந்த நாளில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல், இவர் தெலுங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் வாரங்கல் மாவட்டத்தில் இவர் பாத யாத்திரை மேற்கொண்டபோது, இவரது ஆதரவாளர்களுக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லம் நோக்கிப் புறப்பட்டார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்துவதற்காக அவரது வாகனத்தைப் பளுதூக்கி மூலம் இழுத்துச் சென்றனர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பானது.
இந்த நிலையில் பாத யாத்திரைக்கு அனுமதி தராத காவல் துறையைக் கண்டிக்கும் வகையில் உசைன் சாகர் ஏரி அருகே, அம்பேத்கர் சிலை முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அவர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார். இதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் தனது கட்சி தலைமையகத்தில் அவர் முடிவில்லா உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
தண்ணீர் கூட குடிக்காமல் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது.
இந்த நிலையில் ஞாயிறு அதிகாலை ஒரு மணியளவில், அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஷர்மிளாவின் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்து நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உள்ளதால் உடல்நிலை பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

