இந்தூர்: இளம்பெண் காவல் அதிகாரி ஒருவர், இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் மாணவிபோல நடித்து 'ராகிங்' செய்த மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.
தன்னை முதல் ஆண்டு மாணவியைப் போல காட்டிக்கொண்ட 24 வயது ஷாலினி சவுகான், உணவக ஊழியர் முதல் மூத்த மாணவர்கள் வரை இனிக்க இனிக்கப் பேசி நண்பர்களாக ஆக்கிக்கொண்டார்.
ஐந்து மாதங்களாக கல்லூரி வளாகத்திலேயே சுற்றி வந்த அவர் இவ்வாண்டு ஜூலையில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை கொடூரமாக 'ராகிங்' செய்த 11 மூத்த மாணவர்களைக் கண்டுபித்துள்ளார்.
அண்மையில் இந்தூரில் உள்ள சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையத் தில் அவர் பணியில் சேர்ந்தார். முதல் வேலையே மாறு வேடத்தில் செல்ல வேண்டிய பணியாக இருந்தது.
காவல் அதிகாரியாக பணியாற்றிய அவரது தந்தை பத்து ஆண்டு களுக்கு முன்பு காலமானார். அவரைப் போல தானும் காவல் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இவரும் காவல் பணியில் சேர்ந்தார்.
ஜீன்ஸ் பேண்ட், சட்டையும் அணிந்து கையில் புத்தகமும் பையுமாக மாணவிபோல சென்ற அவர் பல இடங்களில் பல மணி நேரம் மாணவர்களைக் கண்காணித்து வந்தார்.
"'ராகிங்' சம்பவத்தை விசாரித்து வரும் என்னுடைய மூத்த அதிகாரி களான டெஹஸிப் காஸியும் சத்யஜித் சவுகானும் எந்தெந்த மாணவர் களைக் கண்காணிக்க வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தனர். இதற்காக உணவகத்திலும் இடைவேளையிலும் பல மணி நேரம் அவர்களைக் கண்காணித்தேன். அதே சமயத்தில் எல்லோரிடமும் பேசி, பழகி பழைய சகமாணவியைப்போல காட்டிக் கொண்டேன்," என்று ஷாலினி தெரிவித்தார்.
கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை ஆபாசமான செயல்களில் மூத்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபட வைத்துள்ளனர். மொத்தம் 11 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் பீகாரைச் சேர்ந்தவர் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் காவல் நிலையத்தில் முன்னிலையாக உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.

