புதுடெல்லி: இந்திய, சீன எல்லைப் பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.
இந்தத் திடீர் மோதலின்போது இருதரப்பிலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் சில வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருதரப்பு வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் இருபது பேரும் எதிர்த்தரப்பில் நாற்பது பேரும் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக இரு நாடுகளும் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த வீரர்களை திரும்பப் பெற்றுள்ளன.
எனினும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக எல்லைப் பகுதியில் பல்வேறு கட்டுமானப் பணிகளை சீன அரசு ரகசியமாக மேற்கொண்டு வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. மேலும், அவ்வப்போது எல்லை ஊடுருவல் தொடர்பாக இருநாட்டு வீரர்களும் சிறிய மோதல்களில் ஈடுபடுவதும் பின்னர் அமைதி ஏற்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்திய, சீன வீரர்கள் மீண்டும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9ஆம் தேதி, தவாங் பகுதியில் நிகழ்்ந்த இந்த மோதலின்போது இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
சீன ராணுவத்தினர் எல்லையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி, சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதுதான் மோதல் ஏற்பட முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. நவம்பர் 11ஆம் தேதி வரை இந்த மோதல் நீடித்துள்ளது.
மேலும், சீன வீரர்கள் சிலர் எல்லைக்கோட்டை கடக்க முயன்றபோது, இந்திய வீரர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பதற்றம் அதிகரித்த நிலையில், உயரதிகாரிகள் உடனடியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அங்கு தற்காலிகமாக அமைதி திரும்பியுள்ளது.
இதற்கிடையே, எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அப்போது, தவாங் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறியதாகவும் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த மோதலில் எந்த வீரரும் உயிரிழக்கவில்லை. பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. சீன வீரர்களின் அத்துமீறல் குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

