பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத்் தேர்தல் நெருங்குவதையடுத்து வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட கூட்டு யாத்திரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
இந்த யாத்திரை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது காங்கிரசின் வெற்றிக்குக் கைகொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியைத்் தக்க வைத்துக்கொள்ள பாஜக பல்வேறு பிரசார திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் யாத்திரை நடத்துவது என்றும் அப்போது நடப்பு பாஜக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மக்களிடம் விவரிப்பது என்றும் முடிவானது.
"ஊழல்கள் நடந்திருப்பின், அவை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். மொத்தம் ஐம்பது நாள்களுக்கு யாத்திரை நடத்தப்பட வேண்டும்.
"ஜனவரி முதல் வாரத்திலேயே யாத்திரையைத் தொடங்கினால்தான் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய முடியும். எனவே நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்," என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

