புதுடெல்லி: அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக, நியூயார்க் நகரில் வசித்த தனது சகோதரர் இறந்துவிட்டதாகக் கூறி அதற்கான போலி ஆவணங்களை அளித்த இளையரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
ஜஸ்விந்தர் சிங் என்ற அந்த 26 வயது இளையர் மீது அமெரிக்க தூதரகம் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த ஜஸ்விந்தருக்கு அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது விருப்பமாகும். எப்படியாவது அங்கு சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு வந்த அவர், குறுக்கு வழிகளை நாடத் தொடங்கினார்.
இதையடுத்து ஒரு நாடகத்தை அரங்கேற்ற அவர் முடிவு செய்தார். அதன்படி, இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான தாம் பஞ்சாப் காவல்துறையில் கடந்த 2017 முதல் பணியாற்றி வருவதாகவும் நியூ யார்க்கில் வசித்து வந்த தனது சகோதரர் அண்மையில் இறந்துவிட்டதாகவும் அமெரிக்க தூதரகத்தில் அளித்த விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்டார் ஜஸ்விந்தர் சிங்.
தமது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அங்கு செல்ல விரும்பும் தமக்கு விசா அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த ஜஸ்விந்தர் சிங், நியூயார்க்கில் தனது சகோதரர் இறந்தது தொடர்பான சில ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார்.
பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டால் விரைவில் விசா கிடைத்துவிடும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜஸ்விந்தர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
மேலும், ஜஸ்விந்தருக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்டனர். பின்னர், அவர் மீது காவல்துறையில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு நேர்காணலுக்காக சென்ற ஜஸ்விந்தரை அம்மாநில காவல்துறை கைது செய்தது.

