'இந்திய பொருளியல் அடுத்த ஆண்டு 5% வளர்ச்சி காண போராட வேண்டியிருக்கும்'
ஜெய்ப்பூர்: அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளியல் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை எட்டிப்பிடிக்கப் போராட வேண்டியிருக்கும் எனக் கணித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.
இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளதாகவும் இதுபோன்ற காரணிகளால் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ரகுராம் ராஜனும் பங்கேற்றது அரசியல் களத்தில் புதிய விவாதங்களை எழுப்பி உள்ளது. அவரது பங்கேற்பை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்ற நிலையில், பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் விதமாக குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணம் தொடங்கியது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைப்பயணத்தைத் தொடர்கிறார் ராகுல். ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுலை பல்வேறு தரப்பினரும் இந்த நடைப்பயணத்தின் போது சந்திக்கின்றனர். அந்த வகையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் நடைப்பயணத்தில் பங்கேற்றார். அப்போது அவர் ராகுலுடன் பேசிக்கொண்டே நடந்தார்.
"இந்தியாவின் பொருளியல் அடுத்த ஆண்டு கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும். வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. எனவே நாட்டின் பொருளியல் வளர்ச்சி ஐந்து விழுக்காடு அளவை எட்டுவது போராட்டமாக இருக்கும். அனைத்துலக அளவிலும் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும்," என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளியல் ஐந்து விழுக்காடு வளர்ச்சி கண்டால் அதை அதிர்ஷ்டமாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எந்த அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது என்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.
கொரோனா நெருக்கடிக்கு முன்பே இந்தியாவின் பொருளியல் நிலை மந்தமடையத் தொடங்கிவிட்டதாகவும் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை ஏற்படுத்த தவறிவிட்டதாகவும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டி உள்ளார். அவரது இக்கருத்துகளுக்கு பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பில் இருந்தார். இதைச் சுட்டிக்காட்டி உள்ள பாஜகவினர், தமக்கு அந்தப் பதவியை வழங்கிய குடும்பத்துக்கு பட்டுள்ள நன்றிக்கடனை திருப்பிச் செலுத்த ரகுராம் ராஜன் சில கருத்துகளை தெரிவித்துள்ளதாக விமர்சித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பு வகித்தவர் என்றும் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தவர் என்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி சுட்டிக்காட்டி உள்ளார்.
இதற்கிடையே, ரகுராம் ராஜனுடன் தாம் நடந்து செல்லும் புகைப்படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
அதில், "ஒற்றுமைக்காகவும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நடந்தோம்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன் இணைந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

