சனிக்கிழமை
ஒரு சாமானியர்
மாடுகளை வளர்த்து, மாட்டுச் சாணத்தில் மண்புழுவை வளர்த்து, உரத்தை உருவாக்கி, ரசாயன உர நச்சுகளைத் தவிர்ப்பதால் நான் ஒரு நச்சுக்கொல்லி என்கிறார் இயற்கை விவசாயி அருணாஜடேசன், 72.
செய்தி &
படங்கள்:
எம். கே. ருஷ்யேந்திரன்
எலும்பில்லாத மண்புழுகூட பயிர்கள் செழித்து வளர உதவுகிறது. சக மனிதர்கள் உடல்நலத்துடன் வாழ நாம் உதவ முடியாதா என்ன என்று கேட்கிறார் இயற்கை விவசாயி அருணாஜடேசன், 72.
இவர், மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துகுப்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
மாடுகளை வளர்த்து, சாண எரிவாயு தயாரித்து, சாணத்தை மண்புழுக்களுக்கு உணவாக்கி இயற்கை உரம் தயாரித்து, அதை தனது 13 ஏக்கர் வயலில் போட்டு, ரசாயன கலப்பு இல்லாத பல ரக நெல்லை அறுவடை செய்கிறார்.
வேளாண் துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற திரு அருணாவின் இரு புதல்விகளும் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்கள்.
மனைவி வாணி, 65, இயற்கை விவசாயப் பெண்மணியாக தன் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
"நான் 2012 முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். வேலை ஆள்கள் பற்றாக்குறை காரணமாக நான்கு மாடுகளை விற்றுவிட்டேன்.
"இப்போது என்னிடம் மூன்று கறவை மாடுகள் உள்ளன. பால் விற்பனை ஒருபுறம் இருக்க, 1987 முதல் அன்றாடம் சேரும் சாணத் தைக் கொண்டு இயற்கை எரிவாயுவை உருவாக்கி அந்த வாயுவையே அடுப்பு எரிக்க, சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
"சாணத்தை எரிவாயுத் தொட்டியில் கொட்டிவிட வேண்டும். தொட்டியில் இருந்து மீத்தேன் வாயு வெளியாகும். அது குழாய் வழி சமையல் அறை அடுப்புக்குப் போகும். வாயு வெளியாக வெளியாக தொட்டி கீழே இறங்கும். அப்போது அதில் இருக்கும் தண்ணீரும் சாணமும் ஒரு குழாய் வழியாக நாலறை தடுப்புத் தொட்டிக்குப் போய் அதில் சேகரமாகிவிடும்.
"பிறகு தண்ணீர் வடிந்து சாணம் மட்டும் தொட்டி அறைகளில் தங்கும். தொட்டியின் நான்காவது அறையில் வடியும் தண்ணீரை டிராக்டர் மூலம் வயலுக்குக் கொண்டு சென்று வாய்க்கால் வழியாக பயிருக்குப் பாயவிடுவேன்.
"கொஞ்சமாக ஈரப்பதம் இருக்கும் சாணத்தை வேறொரு தொட்டியில் சேர்த்து, ரூ.500 கொடுத்து ஒரு கிலோ மண்புழுவை வாங்கி வந்து அந்தச் சாணத் தொட்டியில் விட்டுவிடுவேன்.
"மண்புழுவை எறும்பு, பெருச்சாளி, மரநாய் ஆகியவற்றிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
"மண்புழு வளரும் சாணத் தொண்டியைச் சுற்றிலும் தண்ணீர் நிற்கும். அதனால் எறும்புகளால் வரமுடியாது. அந்தத் தொட்டி அமைந்துள்ள கொட்டகையைச் சுற்றிலும் கம்பிவலை அமைத்து இருக்கிறேன். இதனால் பெருச்சாளி, மரநாய் நுழைய முடியாது.
"சாணத்தை மண்புழுக்கள் சாப்பிடும். புழுக்கள் இனப்பெருக்கம் செய்யும். கடைசியில் சாணத்தைப் புழுக்கள் உரமாக மாற்றிவிடும். புழு எச்சமே உரமாகும். அதைச் சலித்து புழு வேறு உரம் வேறு என பிரித்துவிடுவோம்.
"ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 டன் மண்புழு உரம் தயாரிக்கிறேன். யாராவது கேட்டால் ஒரு கிலோ மண்புழு உரம் ரூ.12க்கு விற்பேன்.
உரத்தை டிராக்டர் மூலம் வயலில் கொண்டு போய்ச் சேர்த்து ஏக் கருக்கு ஒரு ரக நெல் என்று எனது 13 ஏக்கர் நிலத்தில் குறுவை, சம்பா என இரு போகத்தில் வெவ்வேறு ரக நெல்லை பயிர் செய்வேன்.
"கறுங்குறுவை, கறுப்பு, சிவப்புக் கவுனி, மைசூர் மல்லி, சீரக சம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, நாட்டுப் பாசுமதி, கிச்சடி சம்பா, உள்ளிட்ட பல ரக நெல்லை விளைவிக்கிறேன். விதை நெல்லை யும் விற்கிறேன். வாங்குகிறேன்.
"அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தமாட்டேன். என்னிடம் வேலை பார்க்கும் அத்தனை பேரும் பெண்கள்தான்.
"ஏக்கருக்கு சராசரியாக 2,000 கிலோ நெல் விளைவிக்கிறேன்.
நெல்லை முறைப்படி பக்குவப் படுத்தி அவித்து, காயவைத்து அரைத்து பச்சை, புழுங்கல் அரிசியை சில்லறையில் விற்று வருகிறேன். உளுந்து, பயறும் விளைவிக்கிறேன். அவல், கூழ் வடவம் தயாரித்து விற்கிறேன்.
"பொதுவாக ரசாயனம் இல்லாத அரிசி விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆகக் குறைந்த சிஆர் ரக புழுங்கல் இட்லி அரிசி கிலோ ரூ.50க்கு கொடுக்கிறேன். உயர்ந்த ரக கறுப்புக் கவுனி அரிசியை ரூ.160க்கு விற்கிறேன்.
"இயற்கை உர வேளாண்மையில் எனக்கு லாபம் இல்லை. நட்டம் உண்டு. தமிழகத்தில் 2,500 இயற்கை விவசாயிகள் உள்ளனர். ஆனால், நான் உட்பட 500 பேர்தான் தீவிரமாக ஈடுபடுகிறோம்.
"நாங்கள் 'வளநாடு தற்சார்பு வேளாண் முன்னேற்ற நிறுவனம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி பரஸ்பரம் உதவிக்கொள்கிறோம்.
"வேளாண் படிப்பு மாணவர் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அழைப்பார்கள். என் வீட்டுக்கு வந்து மாணவ, மாணவி கள் இயற்கை விவசாயம் பற்றி நேரடியாக தெரிந்துகொள்வார்கள்.
அரசாங்கத்திடம் இருந்து அங்கீ கார, பாராட்டுச் சான்றிதழ் வாங்கி இருக்கிறேன்.
"மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்கள். உடல்நலத்துக்கு ஏற்ற வாழ்க்கைப்பாணி முக்கியம் என்பதையும் இதற்கு இயற்கை விவசாய அரிசி தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் இப்போது அவர்கள் உணர்கிறார்கள். ஆகையால் ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கை விவசாயம் மூலம் விளையும் அரிசி மீது அவர்களுக்கு நாட்டம் அதிகமாகி வருகிறது.
"இதுவே நான் படும் பாட்டுக்கு பலன் என்பதை நினைத்து மனநிறைவு அடைகிறேன்" என்று திரு அருணா கூறினார்.

