புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வேதனை
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்பது மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையாகும். இந்த சூழலில் ஆளும் கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 60 அமைப்புகள் ஆலோசனையில் ஈடுபட்டன.
அப்போது, முதல்வர் ரங்கசாமி, "மாநிலத் தகுதி கோரிக்கையை வலியுறுத்த சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதுடன், அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்த வேண்டும். சட்டரீதியாக செய்யவேண்டியதைச் செய்வோம்," என்று வலியுறுத்தினார்.
இந்த அமைப்புகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை சட்ட பேரவையில் முதலமைச்சரிடம் அந்த அமைப்பினர் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி மாநிலத் தகுதி இல்லாததால் பல மேம்பாடுகளைச் செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம் என்றார். நிர்வாகத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் சிரமங்களும் வேதனையும் தெரியும். இதனால், அதிகமான மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலமுறை கேட்டும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று என்.ரங்கசாமி தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.
தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பல்வேறு நெருக்கடிகளைத் தந்ததாக அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இப்போது முதல்வர் ரங்கசாமி தனி மாநிலத் தகுதி குறித்து குரலை உயர்த்தியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் "இது வெறும் நாடகம்" என்றும் மாநிலத் தகுதி கிடைப்பதற்கு முதல்வர் ரங்கசாமி எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

