புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நடைப்பயணம்' என்ற பெயரில் இந்திய நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
நடைப்பயணம் நேற்று முன்தினம் நூறாவது நாளை எட்டியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, சீனா முழுமையான போருக்கு தயாராகுவதாகவும், இந்திய அரசு தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடனான போர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், "இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராணுவ வீரர்களின் துணிவைக் குறைத்து மதிப்பிடும் வகையிலும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல. (1962 இந்தியா - சீனா மோதலை மேற்கோள்காட்டி) தூங்கிக்கொண்டிருந்தபோது 37,242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம்.
நேற்று நடைபெற்ற பயணத்தின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் உற்சாகமாக கலந்துகொண்டனர். அவருடன், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவும் நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.

