புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் 27.2.2002ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையும் மதக்கலவரமும் ஏற்பட்டது.
அந்த வன்முறையில் கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அவரின் 3 வயது குழந்தையும் 14 உறவினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் 11 பேருக்கு 2008ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. பின்னர், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறை தண்டனை முடியும் முன்பே விடுவிக்கப்பட்டனர்.
1992ஆம் ஆண்டு குஜராத் அரசு கொண்டு வந்த சட்டத்தின் படி 14 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பில்கிஸ் பானு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பெலா திரிவேதி விலகிவிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி 11 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்தது குஜராத் அரசு. நன்னடத்தை காரணமாக மத்திய அரசின் ஒப்புதலுடன் அவர்களை விடுதலை செய்ததாக அப்போது குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

