புதுடெல்லி: அமெரிக்காவில் நடந்த 'திருமதி உலக அழகி' போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கௌஷல், 31, பட்டம் வென்றுள்ளார்.
திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், இவ்வாண்டுக்கான போட்டியில் 'மிஸஸ் வேர்ல்ட்' பட்டத்தை வென்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கிரீடத்தை தட்டி வந்துள்ளார் சர்கம் கௌஷல்.
இவ்வாண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்கா வின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. 63 நாடுகளைச் சேர்ந்த அழகிகளில் ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌஷல் இந்தியா சார்பில் பட்டம் வென்றுள் ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டுக்கான அழகிப் பட்டத்தை வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஷைலின் ஃபோர்டு, சர்கம் கௌஷலுக்கு அழகிப் பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தபோது, ஆனந்தக் கண்ணீர் உகுத்ததாகக் கூறப்படுகிறது.
அவரது இன்ஸ்டகிராம் பதிவுகளின்படி, திரு2மதி கௌஷல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் முன்பு விசாகப்பட்டினத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தனது கணவர் கடற்படையில் பணிபுரிவதாகவும் இவர் பகிர்ந்துள்ளார்.
முடிசூட்டப்பட்ட பின்னர் இவர் கூறுகையில், "21-22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீடம் கிடைத்துள்ளது. நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். 'லவ் யூ இந்தியா, லவ் யூ வேர்ல்ட்," என்று கூறினார்.
மத்திய, தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பாலினீசியாவைச் சேர்ந்த அழகி இரண்டாம் இடத்திலும் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அழகி மூன்றாம் இடத்திலும் வெற்றிவாகை சூடினர்.

