பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என பாஜக எம்.பி. சுஷில் மோடி வலியுறுத்தி உள்ளார்.
பீகாரின் மதுவிலக்கு, கலால் சட்டப்பிரிவு 42ன்கீழ், கள்ளச் சாராயம் குடித்து இறந்துபோனால் ரூ.4 லட்சமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது.
அதன்படி, இழப்பீடு வழங்காவிடில் மக்களுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என சுஷில் மோடி எச்சரித்துள்ளார்.
பீகார் மாநிலம், சரண் மாவட் டத்தில் உள்ள சாப்ராவில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்த 31 பேர் மரணம் அடைந்தனர். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுடன் சேர்த்து இதுவரை 82 பேர் உயிரிழந்தனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நிதீஷ் குமார் உள்ளார். இம்மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கள்ளச்சாராய விற்பனை கூடி, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது," என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சியான பாஜக அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

