பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த வாகன விபத்துகளில் ஐவர் பலி
புதுடெல்லி: கடந்த சில நாள்களாக வடஇந்திய மாநிலங்களில் கடுங் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வடஇந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை தொடங்கி சுமார் நண்பகல் 12 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது என்றும் இதன் காரணமாக வாகனமோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிரே வாகனங்கள் வருவது தெரியவில்லை என்றும் இதனால் வாகனத்தில் செல்ல அச்சமாக உள்ளது என்றும் வடஇந்திய மக்கள் கூறுகின்றனர். இதனால் பலர் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
வெவ்வேறு வாகன விபத்துகளில் சிக்கி டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் ஐந்து பேர் பலியாகிவிட்டனர். 33 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி அருகே உள்ள தன்கார் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அறுபது பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட அந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
மேலும் சில நாள்களுக்கு இந்தப் பனிப்பொழிவும் கடுங்குளிரும் நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அடர்பனி நீடிக்கும்போது சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறு டெல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசும் அதிகரித்துள்ளது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவுவது வாடிக்கை. சில சமயங்களில் குளிரின் அளவு மிக மோசமாக மாறும்போது உயிரிழப்புகள் அதிகரிக்கும்.
இதையடுத்து வடஇந்தியாவில் வீடுகள் இன்றி சாலையில் வசிப்போருக்காக தற்காலிக தங்கும்இடங்கள் தயாராகின்றன.
இரவு நேரங்களில் இங்கு தங்குவோர் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாள்களில் வட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கக்கூடும்.

