மும்பை: உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் நாடான இந்தியா 2024 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுறும் நிதி ஆண்டில் 6 விழுக்காடு வளர்ச்சி காணும் என இந்திய மத்திய வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டில் முன்னுரைக்கப்பட்ட 6.8 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவான வளர்ச்சி என கணிக்கப்பட்டு உள்ளது.
இதர நாடுகளிலும் இதேபோல வளர்ச்சி குன்றி இருக்கும் என தகவல்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் கொவிட்-19 பெருந்தொற்று மீண்டும் தலையெடுப்பதால் 2023ஆம் ஆண்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆயினும் பெருந்தொற்று மிகுந்திருந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் பொருளியல் நிலவரம் இனி
வரும் ஆண்டுகளில் சிறப்பாகவே இருக்கும் என மத்திய வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. "எல்லாம் சரியாக நடந்தால் இந்தியாவை நோக்கி வரக்கூடிய வெளிநாட்டு முதலீடுகள் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைப் பெறும்," என்று தனியார் முதலீட்டு நிறுவமான ஈனாம் ஹோல்டிங்ஸின் முதலீட்டுப் பிரிவு இயக்குநர் ஸ்ரீதர் சிவராம் தெரிவித்து உள்ளார்.
2021ஆம் ஆண்டில் மூன்றாவது தொற்று அலை வீசியதற்குப் பிறகு இந்தியப் பொருளியல் படிப்படியாக ஏற்றம் காணத் தொடங்கியது. தேங்கிக் கிடந்த விற்பனை மீண்டும் எழத் தொடங்கியதாக பயனீட்டாளர் பொருள் விற்பனை நிறுவனமான வோல்டாஸின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பக்ஷி கூறினார்.
அதேபோல விருந்தோம்பல், பயணம் மற்றும் விடுமுறை ஓய்வு தொடர்பான சேவைகளுக்கான தேவையும் 2019 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு செப்டம்பரில் 7.4 விழுக்காடு அதிகரித்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகள் தெரிவிக்கின்றன.

