புதுதடெல்லி: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை தப்பவிடக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
போதைப் பொருள்கள் கடத்தல் பிரச்சினை அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள போதைப் பொருள் வலைப்பின்னலை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது என்றும் எவ்வளவு பெரிய கும்பலாக இருந்தாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்தச் சட்டவிரோத பணம் நமது பொருளியலைப் படிப்படியாக பாதிக்கும்.
"போதைப் பொருள் அச்சுறுத்தலை தடுக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளும் முன்வர வேண்டும். எல்லைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மூலமாக போதைப் பொருள்கள் நுழைவதை நாம் தடுக்க வேண்டும்," என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லைகளுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த அடிப்படையில்தான் போதைப் பொருள்களை கைப்பற்றும் அதிகாரம் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
"போதைப் பொருள்கள் வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இது தொடர்பு உள்ளவர்கள் கைதாகிறார்கள்.
"போதைப் பொருள் தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படுகின்றன. 12 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லி காவல்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.1,513 கோடி மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருள்கள் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.

