புதுடெல்லி: நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த காரசார உரையாடல் தொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
துருக்கியில் இருந்து டெல்லியை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவை தேர்வு செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது அந்தப் பயணி, "நீங்கள் பயணிகளின் வேலைக்காரர்கள்," என்று கோபமாகக் குறிப்பிட, அதற்கு, "நான் உஙகள் பணியாளர் மட்டுமே, வேலைக்காரர் அல்ல," பதிலடி கொடுக்கிறார் விமானப் பணிப்பெண்.
இந்த மோதலால் கோபமடைந்த பயணி, "ஏன் இப்படி உரக்கப் பேசுகிறீர்கள், வாயை மூடுங்கள்," என்று சொல்ல, பதிலுக்கு பயணியை நோக்கி "வாயை மூடுங்கள்" என்கிறார் விமானப் பணிப்பெண்.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

