புதுடெல்லி: சீனாவும் இந்தியாவும் தங்கள் எல்லையில் படைபலத்தைக் கூட்டி வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி இரு தரப்பு வீரர்களும் கைகலப்புகளில் ஈடுபட்டதாகவும் பல வீரர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இதனிடையே, அத்தகைய கைகலப்புகள் எந்த நேரத்திலும் ஆயுத மோதலாக வெடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அருணாச்சலப்பிரதேச மாநிலத்துடன் கூடிய சீனாவின் எல்லையில் அந்தக் கைகலப்பு நடந்தது.
மொத்தம் 3,488 கி.மீ. எல்லை பகுதியின் கிழக்குப் புறத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இரு தரப்புகளும் பெரிய அளவில் ஆயுதங்களை வேகமாக குவித்து இருக்கின்றன. அதேவேளையில், இரு தரப்புகளும் பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகின்றன.
கிழக்கு லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவத் தளபதிகளுக்கு இடையே இம்மாதம் 20ஆம் தேதி 17வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அந்தப் பேச்சு ஆக்கபூர்வமாக இருந்ததாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
இந்தியா-சீனா எல்லைக் கோடு தெளிவாக இன்னமும் வரையறுக்கப்படவில்லை. இதனால் இரு தரப்புகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகிறது.
எல்லைப் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி பேச்சு நடந்து வரு வதாகவும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் தொடர்பில் நடந்த 17வது பேச்சு வெளிப்படையாக இருந்ததாகவும் கூட்டறிக்கை கூறியது.
அதோடு, மட்டுமின்றி எல்லை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகண்டு, இரு தரப்பு உறவை மேம்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் இரு நாடுகளும் முன்னேற தொடர்ந்து ராணுவத் தளபதிகள் அளவிலும் தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய-சீன படைகளிடையே எல்லையில் நடந்த மோதல் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிட்டு கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

