புதுடெல்லி: பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று மோசடி செய்த வழக்கின் தொடர்பில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐசிஐசிஐ தனியார் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்ட சந்தா கோச்சார், தன் பதவி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடன் பரிவர்த்தனையின் மூலம், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரும் அவரது உறவினர்களும் பெருமளவில் பலன் அடைந்ததாகவும் கடந்த 2018ல் தகவல்கள் அம்பலமாகின.
கடந்த 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்தில் சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோருக்கு சட்டவிரோதமாக 1,875 கோடி ரூபாய் கடனுதவி வழங்க உத்தரவிட்டார்.
பின்னர், அந்தக் கடன் தொகை சந்தா கோச்சாரின் கணவர் நடத்தி வந்த 'நியூ பவர் சுப்ரீம் எனர்ஜி' என்ற நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றிவிடப்பட்டது.
அத்துடன், சந்தா கோச்சாரின் பதவிக் காலத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை, திரும்பி வராக் கடன் தொகையாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, கடந்த 2018ல் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து சந்தா கோச்சார் விலக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வீடியோகான் கடன் மோசடி வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தன.
இவ்வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தா கோச்சார், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ இப்போது கைது செய்துள்ளது.
டெல்லியில் விசாரணைக்கு முன்னிலையான இருவரையும் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

