மண்டியா: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதுடன் தமிழகம், கேரளாவில் கட்சியை வலுப்படுத்த கடந்த இரண்டு வாரங்களாக பா.ஜ.க கட்சியின் முக்கிய தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித் ஷா பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகா மாநில பாஜக சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, "கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. அந்த கட்சிகள் ஊழல் கொள்ளை நடத்துகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லி ஏ.டி.எம். போல செயல்படும்.
மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்தால், அது ஒரு குடும்ப ஏ.டி.எம் ஆக இருக்கும்.
இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.
அதனால் ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்.
மண்டியா, மைசூரு மண்டலத்தில் அந்த இரு கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பாஜகவை நீங்கள் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்குக் கொண்டு செல்வோம்," என்றார்.

