3,000 கி.மீ. நடந்த ராகுல் காந்தி
புதுடெல்லி: 2022 செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் அந்த நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ராகுலின் இந்தப் பயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது. இந்திய வரலாற்றில் எந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் மேற்கொள்ளாத மிக நீண்ட நெடும் நடைப்பயணம் இது என்று கூறப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும். இந்த நிலையில், இந்த நடைப்பயணம் ஒன்பது நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நேற்று உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியது. மொத்தம் 110 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த நடைப்பயணத்தில் இதுவரை 3,000 கி.மீ. வரை அவர் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு
ஜெகன் மோகன் ரெட்டி தடை
ஹைதராபாத்: முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டூர் அருகே சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு
மேலும் கட்டுப்பாடு
புதுடெல்லி: கொவிட்-19 தொற்று ஆபத்து அதிகமுள்ள சீனா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வேறு நாடுகளில் இருந்து புறப்பட்டு, இந்த 6 நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கும் தொற்றுப் பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

