புதுடெல்லி: வடஇந்தியாவில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை குறைந்து, உடலைச் சில் லிட வைக்கும் குளிர்காற்று வீசி வருகிறது. கடும் பனி மூட்டமும் நிலவுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 1901ல் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவியது. ஏறக்குறைய 122 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது தாங்கமுடியாத குளிர் நிலவுகிறது.
இதனால், அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
வாட்டும் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீமூட்டி அதனைச் சுற்றி அமர்ந்து குளிர் காய்ந்தும் வருகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 11 டிகிரி செல்சியசாகவும் டெல்லியில் நேற்று காலை 3 டிகிரி செல்சியசாகவும் தட்பவெப்பநிலை பதிவானதை அடுத்து, குளிரில் உறைந்து விடுவோமோ என மக்களிடம் அச்சம் நிலவியது.
டெல்லி விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் பனிமூட்டம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடர்த்தியான பனிமூட்டத்தால் சாலைகள் தெளிவாக தெரியாததால் வடக்கு ரயில்வே மண்டலத்தில் 12 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.
பஞ்சாப், அரியானா, சண்டிகர், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுங்குளிர் நிலவுகிறது. இம்மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு குளிர் காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கையும் டெல்லியில் கடுங்குளிர் நிலவுமென சிவப்பு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
"அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு வடக்கு-மேற்கு இந்தியாவில் மிக அடர்த்தியான மூடுபனியும் கடும் குளிரும் தொடரக் கூடும், அதன்பின் தீவிரம் குறையும்," என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"எனது கடையை காலை 5 மணிக்கெல்லாம் திறந்துவிடுவேன். என் வாழ்வாதாரத்துக்கு இந்தக் குளிரைக் கடந்துதான் ஆகவேண்டும். அதனால்தான் தீமூட்டி குளிர்காய்கிறேன்," என இ-ரிக்ஷா பழுதுபார்க்கும் கடையை நடத்தும் ஆடவர் ஒருவர் ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறியதாக 'டைம்ஸ் நவ்' ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
தங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் எருமைகள் குளிரால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அவற்றை போர்வை, புடவையால் போர்த்திப் பராமரிக்கும் டெல்லி ஆடவர். படம்: ராய்ட்டர்ஸ்