ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்பவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க புதுடெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஏற்றுநடத்தும் டாட்டா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் சம்பவத்தை கண்டித்துள்ளார். சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றார் அவர்.
சம்பவம் தனக்கும் தமது சக ஊழியர்களுக்கும் வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்ட சந்திரசேகரன், இத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
சம்பவம் நடந்த விமானத்தில் பணிபுரிந்த நான்கு சிப்பந்திகள், விமானி ஒருவர் ஆகியோர் தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.