டேராடூன்: ஜோஷிமத் நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இயற்கைப் பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் தங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் தங்கள் வீடுகளை அரசு இடிக்கக்கூடாது என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக வசித்த வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டு பலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமத்தில் கடந்த சில நாள்களாக சாலைகள், கட்டடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
அங்கு ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள், பாதிக்கப்பட்ட கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பத்து கோடி பேர் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வருகை புரிகின்றனர். இதனால் அண்மைய சில ஆண்டுகளாக அங்கு ஏராளமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால்தான் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறினர்.
இந்நிலையில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அபாய நிலையில் உள்ள கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதனால் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கட்டடங்களை இடிப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உரிய இழப்பீட்டை அறிவிக்கவில்லை என பலர் கண்ணீர்மல்க தெரி வித்தனர். ஒரு தரப்பினர் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

