புதுடெல்லி: ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் இரண்டுநாள் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம், இன்று வரை டெல்லியில் என்டிஎம்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக அக்கட்சி மிகப்பெரிய கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த மிகப்பெரிய பேரணியில் கலந்துகொண்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பேரணி காரணமாக டெல்லியின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.
இந்த மாநாடு குறித்து பாஜ கட்சியின் பொதுச்செயலாளர், வினோத் தாவ்டே கூறுகையில், "நல்லாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளித்த இந்தியா" உள்ளிட்ட ஆறு வெவ்வேறு கருப்பொருள்களில் ஒரு மாபெரும் கண்காட்சி இரண்டு நாள் செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

