புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் அதாவது கிட்டத்தட்ட ரூ.6,000 கோடியில் முதலீடு செய்யப்படவிருந்த தொழிற்சாலை கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றுவிட்டது. அதற்குக் காரணம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததுதான் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
அவ்வாறு, முதலீட்டாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான சட்டம் பாயும் என்று பட்னாவிஸ், புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார்.
தொழிலதிபர் ஒருவர் தம்மைச் சந்தித்ததாகவும், அவர் ரூ.6,000 கோடி முதலீடு செய்து மகாராஷ்டிராவில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அப்போது பணம் கேட்டு தான் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். அதனால்தான் வேறுவழியின்றி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கர்நாடகாவுக்கு மாற்றியதாக அந்தத் தொழிலதிபர் தெரிவித்தார் என பட்னாவிஸ் கூறினார்.
"இந்த நிலைமை நீடித்தால் மகாராஷ்டிராவில் வேலை வாய்ப்பின்மை ஏற்படக்கூடும். இதனால் முதலீட்டாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்.
"எனவே இப்படிப்பட்டவர்கள் மீது சாதி, மதம், அரசியல் என அவர்கள் சார்ந்துள்ள அமைப்பு பற்றி கவலை கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்," என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.

