ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வின் அதிர்ச்சித் தகவல்
புதுடெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 40.5 விழுக்காடு வளத்தை இந்தியாவின் ஒரு விழுக்காட்டு செல்வந்தர்கள் வைத்திருக்கின்றனர். எஞ்சியுள்ள வளத்தைத்தான் மற்ற அனைவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல் ஆக்ஸ்ஃபாம் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 102 கோடீஸ்வரர்களே இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வறுமைக்கோட்டில் உள்ளோரால் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை, பணக்காரர்களிடையே இருந்து வரும் மோசமான சமத்துவமின்மையைப் போக்க வேண்டுமெனில், செல்வந்தர்களால் பயன்படுத்தப்படும் ஆடம்பரப் பொருள்களுக்கு அதிகமான வரி விதிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று இந்தியாவின் நிதி அமைச்சை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் தொடங்கியுள்ள உலகப் பொருளியல் கருத்தரங்கில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் கடந்த 2012 முதல் 2021 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த வளங்களில் 40 விழுக்காட்டுக்கு மேலான வளங்கள் வெறும் ஒரு விழுக்காட்டினரிடம் உள்ளன.
இந்தியாவின் பெரும் செல்வந்தரான கௌதம் அதானியின் சொத்துகள் கடந்த ஆண்டில் மட்டும் 46% அதிகரித்துள்ளது. இதுபோல இந்தியாவில் உள்ள 100 பெரும் செல்வந்தர்கள் $600 பில்லியன் சொத்துகளைக் கொண்டுள்ளனர்.
2022ல் இந்தியச் செல்வந்தர் அதானி உலகத்தின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக அண்மையில் புளூம்பெர்க்கின் ஆய்வறிக்கை தெரிவித்தது.

