இந்தியாவில் செல்வந்தர்கள்தான் அதிகளவில் வரி செலுத்துகின்றனர் என்ற ஒரு மாயத் தோற்றத்தை உடைக்கும் வகையில் ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் விதிக்கப்படும் வரிகளுக்கு செல்வந்தர்களைக் காட்டிலும் ஏழைகளும் நடுத்தர மக்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிகளவில் வரி செலுத்துகின்றனர் என்றும் ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தோராயமாக 64 விழுக்காடு பொருள் சேவை வரிப் பணத்தில் 50 விழுக்காட்டு வரிப்பணம் ஏழை எளியவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. நாட்டின் முன்னணிப் பணக்காரர்கள் 10 விழுக்காட்டினரிடம் இருந்து வெறும் 4% வரியே பெறப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கை, மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களே பெரும்பாலான மறைமுக வரியை அல்லது நுகர்வோர் தொடர்பான வரிகளைச் செலுத்துகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, மொத்த பொருள் சேவை வரித் தொகையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட தொகையை அதாவது 64.3 விழுக்காட்டு வரியைச் செலுத்துவது அடித்தட்டு மக்கள்தான்.
இதில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை நடுத்தர மக்களும், வெறும் 3-4% ஜிஎஸ்டி தொகையைத்தான் நாட்டில் வாழும் பணக்காரர்களும் செலுத்துகிறார்கள்.
2021 - 22ஆம் ஆண்டில் அரசாங்கம் வசூலித்த மொத்த பொருள் சேவை வரி ரூ.14.7 லட்சம் கோடி. 2022 - 23ஆம் நிதியாண்டில் இது ரூ.18 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
அதாவது, குறைந்த வருவாய் ஈட்டும் மக்கள்தான் மறைமுக வரியை அதிகம் செலுத்துகின்றனர்.
நடுத்தர மக்கள்கூட 40 விழுக்காடு மறைமுக வரியைத்தான் செலுத்துகின்றனர் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, அனைத்து இந்திய அளவில் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களே 6 மடங்கு அதிக மறைமுக வரி செலுத்துகின்றனர்.
எனவே, மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருள்களுக்கான பொருள் சேவை வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், ஆடம்பரப் பொருள்களின் வரியை உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வருவாயையும் பெருக்க முடியும், ஏழைகளின் சுமையும் இயல்பாகக் குறைக்கப்பட்டு, அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க உதவும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

