புதுடெல்லி: நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி, 16ஆம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதியும் தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை ஜனவரி 31ஆம் தேதியும், வேட்புமனுவை பிப்ரவரி 2ஆம் தேதி மீட்டுக்கொள்ளலாம் என்றும் ஆணையம் தெரிவித்தது.
மூன்று மாநிலங்களுக்கும் ஆன சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறும்.
அம்மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடப்புக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் பாஜக - நாகா மக்கள் முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நாகா மக்கள் முன்னணிக் கட்சியைச் சேர்ந்த நெப்பியூ ரியோ முதல்வராக உள்ளார்.
மேகாலயாவில் பாஜக - தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வராக தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா உள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மாணிக் சாகா முதலமைச்சராக உள்ளார்.
இந்த மூன்று மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றப் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. நாகலாந்து மாநிலத்தில் மார்ச் 12, மேகாலாயா மாநிலத்தில் மார்ச் 15 மற்றும் திரிபுரா மாநிலத்தில் மார்ச் 22 ஆகிய தேதிகளில் சட்டமன்றப் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தேதியை இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

