புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 104 வார்டுகள் பாஜக வெற்றிபெறுவதற்கு தானே முழுக் காரணம் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கூறியதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துணை நிலை ஆளுநர் சக்சேனாவுக்கும் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு அனுப்பி அங்குள்ள கற்பிக்கும் முறை குறித்த பயிற்சிபெற வைக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு ஒப்புதல் தராத துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, இந்தியாவிலேயே பயிற்சி வழங்குவது குறித்து டெல்லி அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
டெல்லி சட்டமன்றத்தில் பேசிய கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பின்லாந்து நாட்டில் பயிற்சிபெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்ததை ஆளுநர் தடுத்து நிறுத்தியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
பள்ளி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஆளுநர் சக்சேனா விளையாடுவதாக அவர் கூறினார்.
இப்போது இங்கு காலனித்துவ ஆட்சி நடக்கவில்லை என்றும், மக்கள் ஆட்சி நடப்பதாகவும் அவர் கூறினார்.
டெல்லி ஆளுநருக்கு உள்ள அதிகாரம் பற்றி உச்சநீதி மன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பிறகும் தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்சினைகள் வளர்ந்து வருகின்றன.
சட்டமன்ற விவாதத்தின் போது பேசிய கெஜ்ரிவால், "எனது பணிகளை ஆளுநர் உன்னிப்பாகக் கவனிப்பதுபோல், தனது பள்ளிக்கூட ஆசிரியர் கூட தனது வீட்டுப்பாடத்தைச் சரிபார்த்தது இல்லை," என தெரிவித்தார். "தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், ஆனால், இந்த துணை நிலை ஆளுநர் யார் என்றும் கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால், நமது குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்?" என்றும் விமர்சித்தார்.

