புதுடெல்லி: இந்தியாவுடன் 'தண்ணீர்ப் போர்' நடத்த சீனா தயாராகி வருவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான சீனாவின் செயல்பாடுகளை எதிர்கொள்ள இந்தியா தன்னை தயார்ப்படுத்தி வருவதாக உலக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணையைக் கட்டி வருகிறது சீனா. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை இந்தியா வேகப்படுத்தி உள்ளது.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம் இந்தியாவுக்கு புதிய நெருக்கடிகளை ஏற்படுத்த சீனா முயற்சி செய்வதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2015ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஏறத்தாழ ரூ.1.22 லட்சம் கோடி செலவில் சீனா பிரம்மாண்ட அணையைக் கட்டியுள்ளது.
இதையடுத்து மேலும் ஓர் அணையைக் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சில இந்திய மாநிலங்கள் தண்ணீர், மின்சாரத் தேவைகளுக்குப் பிரம்மபுத்திரா நதியைத்தான் நம்பி உள்ளன. எனினும் இந்நதியின் ஐம்பது விழுக்காடு பரப்பு சீனாவில் இருப்பதால், அந்நாடு தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியாவால் தடுக்க முடியவில்லை.
சீனா இரண்டாவது அணையைக் கட்டிய பின்னர் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்திய மாநிலங்களில் கோடைக்காலங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சமும் மழைக்காலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும் என்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள்.
இந்தியாவைப் போல் அதன் அண்டை நாடான பங்ளாதேஷும் இதேபோன்று பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே இந்தியா கட்டும் புதிய அணையால் வெள்ள அபாயத்தில் இருந்து இந்திய மாநிலங்கள் தப்பித்துவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் சீனா அணை கட்டுவது, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் அதேபோன்ற நடவடிக்கைகளின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்காக இரு நாடுகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வருகின்றன.
இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேச மாநிலத்தில் சில பகுதிகளை சீனா தனக்குரியது என கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

