ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் தேசிய அளவில் புதிய கூட்டணிக்கு அடித்தளமிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், தெலுங்கானா பொதுக்கூட்டத்தி்ல் பேசிய நான்கு மாநில முதல்வர்களும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் சரமாரியாக விமர்சித்தனர்.
அப்பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், நாட்டில் நிலவும் நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என சாடினார்.
தாம் தலைமையேற்றுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆதரவில் அமையும் புதிய மத்திய அரசு, ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் என்றார் அவர்.
தற்போது நாடு மாற்றத்தை விரும்புகிறது என்றும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலானது அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த மக்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டின் அரசியல் சாசனத்தைக் காக்க ஒரு புதிய எதிர்ப்பு தேவை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியில் உள்ள பாஜக அரசு தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் தற்போதைய ஆட்சிக்காலத்தைக் கடந்து அது நீடிக்காது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏராளமான இளையர்கள் உரிய வேலை வாய்ப்புகள் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
நாடு புதிய வேலைவாய்ப்புகளை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சாடினார்.
இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினர்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக புதிய அணியை உருவாக்க முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதால், சந்திரசேகர ராவின் அரசியல் நகர்வுகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பார் எனக் கருதப்படுகிறது.

