அகமதாபாத்: காதலித்தபோது திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டு, காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்ட பிறகு அவர்களது சிலைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்த சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள தாபி பகுதியைச் சேர்ந்த கணேஷ், ரஞ்சனா இருவரும் காதல் வயப்பட்டனர்.
இதுகுறித்து இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தபோது, காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
அதன் பிறகு இருவரது பெற்றோரும் மனம் மாறினர். இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவுக்கு தங்களுடைய எதிர்ப்புதான் காரணம் என மனம் வருந்தினர்.
இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும், ஆறு மாதங்களுக்குப் பிறகு கணேஷ்-ரஞ்சனா சிலைகளை தத்ரூபமாக செய்து அவற்றுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இறந்தவர்களின் ஆன்மா அமைதிகொள்ள வேண்டும் என்பதற்காக இருவரது விருப்பத்தை நிறைவேற்ற தாங்கள் இவ்வாறு செய்ததாக அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.