புதுடெல்லி: விமானத்தில் 70 வயது மூதாட்டி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதித்துள்ளதுடன், சம்பவத்தின்போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை மூன்று மாதத்திற்கு இடைக் காலமாக ரத்து செய்தும் உத்தர விட்டுள்ளது. தனது கடமையைச் செய்யத் தவறியதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானச் சேவைகள் இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தார்.