புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு முன்னாள் நீதிபதிகள், உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் உள் ளிட்ட பல துறைகளின் 300க்கும் மேலான பிரபலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்ட போது அம்மாநில முதல்வராக மோடி ஆட்சி செய்து வந்தார்.
இந்தக் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்று 'இந்தியா - மோடி குவெஸ்டியன்' என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் 13 முன்னாள் நீதிபதிகள், 133 ஓய்வுபெற்ற தூதரக உயரதிகாரிகள், 156 ராணுவ உயரதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளின் 300க்கும் மேலான பிரபலங்கள் ஆவணப் படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்களது கையெழுத்துடன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தவறான, பாரபட்சமான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் பிரதமருக்கு எதிராக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது," என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பிபிசி ஆவணப் படத்துக்கு தடை விதித்து, ஆவணப் படக் காணொளிகள், கருத்துகளை நீக்க சமூக வலைத் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, டுவிட்டர், யூடியூப் நிறுவனங்கள் காணொளிப் பதிவுகளை நீக்கி வருகின்றன.

